இது நிவாரணமா தண்டனையா

மதுரை: நாடு முழுதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, 21 நாள் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

பல்வேறு வர்த்தக நிறுவனங்கள், கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன. கோடிக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர். தினக் கூலி தொழிலாளர்கள், மாத சம்பளதாரர்கள் என, அனைத்து தரப்பினருமே பாதிக்கப்பட்டுள்ளனர். வங்கிகளில், வீடு, வாகனம், கல்வி ஆகியவற்றுக்காக கடன் வாங்கியவர்கள், இந்த மாத, இ.எம்.ஐ., எப்படி செலுத்துவது என கவலையில் ஆழ்ந்திருந்தனர். இதையடுத்து, 'வங்கிகளில் கடன் பெற்றவர்கள் மூன்று மாதங்களுக்கு, இ.எம்.ஐ., செலுத்தத் தேவையில்லை' என, ரிசர்வ் வங்கி அறிவித்தது.



இந்நிலையில், மதுரை எம்.பி., வெங்கடேசன் வெளியிட்ட அறிக்கை: நிதி நிறுவனங்களின் கடன் மீதான இ.எம்.ஐ தவணைகள் மூன்று மாதங்களுக்கு வசூலிக்கப்படாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது. நான் உட்பட பல அரசியல் தலைவர்கள் எழுப்பிய கோரிக்கையே இது. ஆனால் இந்த அறிவிப்பின் மகிழ்ச்சி இன்று ஸ்டேட் வங்கி தனது இணைய தளத்தில் விடுத்துள்ள அறிவிப்பின் மூலம் திருடப்பட்டுள்ளது. ஸ்டேட் வங்கி ஓர் கணக்கை தனது இணைய தளத்தில் போட்டுள்ளது.

* வாகன கடன் ரூ 6 லட்சமாகவும், நிலுவை தவணைகள் 54 மாதங்கள் ஆகவும் இருப்பின் இந்த 3 மாதம் தவணை செலுத்துதல் தள்ளி வைக்கப்படுவதால் கூடுதலாக இறுதியில் ரூ 19000 கட்ட வேண்டி வரும். இது ஒன்றரை இ. எம்.ஐ தவணைகளுக்கு சமம்.

* வீட்டுக் கடன் 30 லட்சமாகவும், நிலுவை ஆண்டுகள் 15 ஆகவும் இருக்கிற பட்சத்தில் இந்த 3 மாதம் தவணை செலுத்துதல் தள்ளி வைக்கப்படுவதால் கூடுதலாக 2.34 லட்சம் கட்ட வேண்டி வரும். இது 8 இ.எம்.ஐ களுக்கு சமம். இந்த கணக்கு ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள இ.எம்.ஐ தவணை தள்ளி வைப்பு நிவாரணம் அல்ல... தண்டனை என்ற அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

கோவிட் 19 ஆல் நிலை குலைந்து, பரிதவித்து நிற்கிற சாதாரண, நடுத்தர வர்க்க மக்களுக்கு ஏதோ கைகளில் தருவது போல பாவனை செய்துவிட்டு அவர்களிடம் இருப்பதையும் (?) தட்டிப் பறிக்கிற குரூரத்தை அரங்கேற்றுவது என்ன நியாயம்? மக்கள் கேட்பது, அவர்களுக்கு தெரிந்தது ஒன்றே ஒன்றுதான்... 3 மாதம் தவணைகள் பிடிக்கப்படாவிட்டால் நிலுவைக் காலத்திலும் அதே இ.எம்.ஐ தொகையோடு 3 மாதங்கள் நீடிக்க வேண்டும் என்பதுதான்...

நிதி அமைச்சரே... ரிசர்வ் வங்கி கவர்னரே... கந்து வட்டிக் காரர்களை விட மோசமாக நடந்து கொள்ளாதீர்கள்... உங்களிடம் மனிதாபிமானம் எதிர்பார்த்தது அவ்வளவு பெரிய குற்றமா? அதற்கு தண்டனையா? மக்களுக்கு கூடுதல் சுமை இன்றி உங்கள் முடிவை அமலாக்குங்கள்... இவ்வாறு அதில் கூறியுள்ளார்.